Thursday, January 22, 2009

௫௬ சுறா அல் வஃஇஅஹ் Surah Al Waqiah


அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[56:1]
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்

[56:2]
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.

[56:3]
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.

[56:4]
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.

[56:5]
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,

[56:6]
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.

[56:7]
(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.

[56:8]
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)

[56:9]
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)

[56:10]
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.

[56:11]
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.

[56:12]
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.

[56:13]
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,

[56:14]
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -

[56:15]
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -

[56:16]
ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.

[56:17]
நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.

[56:18]
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).

[56:19]
(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.

[56:20]
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -

[56:21]
விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).

[56:22]
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.

[56:23]
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).

[56:24]
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.

[56:25]
அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.

[56:26]
'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).

[56:27]
இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)

[56:28]
(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்:

[56:29]
(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்:

[56:30]
இன்னும், நீண்ட நிழலிலும்,

[56:31]
(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,

[56:32]
ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -

[56:33]
அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -

[56:34]
மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).

[56:35]
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி,

[56:36]
அப்பெண்களைக் கன்னிகளாகவும்,

[56:37]
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,

[56:38]
வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).

[56:39]
முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,

[56:40]
பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).

[56:41]
இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)

[56:42]
(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -

[56:43]
அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.

[56:44]
(அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.

[56:45]
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.

[56:46]
ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.

[56:47]
மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.

[56:48]
"அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.)

[56:49]
(நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.

[56:50]
"குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.

[56:51]
அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,

[56:52]
ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.

[56:53]
ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.

[56:54]
அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.

[56:55]
"பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்."

[56:56]
இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.

[56:57]
நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?

[56:58]
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?

[56:59]
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?

[56:60]
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.

[56:61]
(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).

[56:62]
முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?

[56:63]
(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

[56:64]
அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?

[56:65]
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.

[56:66]
"நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.

[56:67]
"மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).

[56:68]
அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?

[56:69]
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?

[56:70]
நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

[56:71]
நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?

[56:72]
அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?

[56:73]
நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம்.

[56:74]
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.

[56:75]
நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.

[56:76]
நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும்.

[56:77]
நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.

[56:78]
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.

[56:79]
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.

[56:80]
அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.

[56:81]
அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?

[56:82]
நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?

[56:83]
மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -

[56:84]
அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

[56:85]
ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.

[56:86]
எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -

[56:87]
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!

[56:88]
(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.

[56:89]
அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.

[56:90]
அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,

[56:91]
"வலப்புறத்தோரே! உங்களுக்கு "ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்).

[56:92]
ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்

[56:93]
கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.

[56:94]
நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).

[56:95]
நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.

[56:96]
எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.