Friday, January 23, 2009

௯௨ சுறா அல் லாயல் Al Layl


அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[92:1]
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக

[92:2]
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-

[92:3]
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-

[92:4]
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.

[92:5]
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,

[92:6]
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,

[92:7]
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.

[92:8]
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,

[92:9]
இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,

[92:10]
அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.

[92:11]
ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.

[92:12]
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.

[92:13]
அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.

[92:14]
ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.

[92:15]
மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.

[92:16]
எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.

[92:17]
ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.

[92:18]
(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.

[92:19]
மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.

[92:20]
மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).

[92:21]
வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.