Friday, January 23, 2009

௯0 சுறா அல் பலத் Al-Balad


அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[90:1]
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

[90:2]
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,

[90:3]
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,

[90:4]
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.

[90:5]
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?

[90:6]
"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.

[90:7]
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?

[90:8]
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?

[90:9]
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?

[90:10]
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.

[90:11]
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.

[90:12]
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.

[90:13]
(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-

[90:14]
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.

[90:15]
உறவினனான ஓர் அநாதைக்கோ,

[90:16]
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).

[90:17]
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.

[90:18]
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.

[90:19]
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.

[90:20]
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.