Friday, January 23, 2009

௮௧ சுர் அட் தக்வீர் At Takwir


அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[81:1]
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது

[81:2]
நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-

[81:3]
மலைகள் பெயர்க்கப்படும் போது-

[81:4]
சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-

[81:5]
காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-

[81:6]
கடல்கள் தீ மூட்டப்படும்போது-

[81:7]
உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-

[81:8]
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-

[81:9]
"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-

[81:10]
பட்டோலைகள் விரிக்கப்படும் போது-

[81:11]
வானம் அகற்றப்படும் போது-

[81:12]
நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-

[81:13]
சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-

[81:14]
ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.

[81:15]
எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-

[81:16]
முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),

[81:17]
பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,

[81:18]
மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.

[81:19]
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.

[81:20]
(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.

[81:21]
(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.

[81:22]
மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.

[81:23]
அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.

[81:24]
மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.

[81:25]
அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.

[81:26]
எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?

[81:27]
இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.

[81:28]
உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).

[81:29]
ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.