Friday, January 23, 2009

௯௧ சுறா அச் ஷம்ஸ் Ash Shams


அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[91:1]
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக

[91:2]
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-

[91:3]
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-

[91:4]
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-

[91:5]
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-

[91:6]
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-

[91:7]
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-

[91:8]
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.

[91:9]
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.

[91:10]
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.

[91:11]
'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.

[91:12]
அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,

[91:13]
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.

[91:14]
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.

[91:15]
அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.